July 06, 2006

சென்னை விஜயம்..



மன்னிக்கனும்...மன்னிக்கனும்...மன்னிக்கனும்... போன மாசம் அவசரமா சென்னை போக வேண்டியதா போச்சு. சொல்லக்கூட நேரம் இல்ல. இதோ இப்பதான் வந்து கனிணி முன்னாடி இருக்கேன். ஆனா! சென்னைக்கு நான் வந்த விஷயத்தை சென்னைவாசிகளுக்கு நம்ம மழை சொல்லிடிச்சு. சென்னை 8 மாசத்துல ஒரு மாற்றமும் இல்ல. அப்படியே தான் இருக்கு. ஆனா என்னோட பார்வை தான் மாறியிருக்கு. சென்னையும் பக்ரைன் மாதிரி மாறாதா என சின்ன ஆசைதான். அப்புறம் என்ன 10 நாளும் ஊர் சுத்தறது தான் வேலை. வானிலையும் கொஞ்சம் நல்லா இருந்ததால கவலையே இல்ல. நிறைய வேலை பாதியிலே இருந்தது. ஒரளவுக்கு முடிச்சாசு. அம்மாவின் ஆசையை இப்போதான் நிறைவேத்த முடிந்தது.

சென்னை வந்ததுக்கு இன்னோரு முக்கிய காரணம், ஸ்ரீராம். இரண்டரை வயது அண்ணன் மகன். 8 மாசமா வெறும் தொலைபேசியிலே குரலைக்கேட்டவனுக்கு ஒரு எட்டு போய் பாக்கலாம்னு நினைச்சேன். உடனே கிளம்பிட்டேன். ஸ்ரீராம் மீது எல்லோருக்கும் கொஞ்ச பாசம் அதிகம். குடும்பத்திலே முதல் குழந்தை. அதுவும் எனக்கு ரோம்ப ராசிக்கார பயல். அவன் பிறந்தநாள் அன்று தான் என் வேலையோட 'Appointment Order' வாங்கினேன். அவன் என்ன கேட்டாலும் வீட்டில அடுத்த நொடி இருக்கும். எல்லாரும் கொஞ்சம் அதிகமாவே செல்லம் கொடுப்போம்.

நான் அவசரமா கிளம்ப வேண்டியிருந்ததால அவனுக்கு எதுவும் வாங்கமுடியலை. வழியிலே கொஞ்சம் இனிப்பு தான் வாங்க முடிஞ்சது. பரவாயில்ல! இந்தியா போய் வாங்கிகலாம்னு வந்துட்டேன்.

இந்தியாவில, முடிந்த அளவு நேரத்தை அவனுக்காக செலவளித்தேன். அவனுக்கு பிடிச்சது, பிடிக்காதது, பார்த்தது, கேட்டது எல்லாம் வாங்கித்தரனும் ஆசைப்பட்டேன். இரண்டரை வயசு ஆசைகள் ஒன்னும் பெரிசா இல்ல. 10 நாளும் எப்படிப்போச்சு தெரியலை. கிளம்ப வேண்டிய நாள் வந்தாச்சு. அம்மா இன்னும் கொஞ்ச நாள் இருக்க சொன்னாங்க. ஆனா நான் தான் விடுப்புல இருந்தா சம்பளம் வராது னு கிளம்பிட்டேன்.

எனக்கு மறுநாள் அதிகாலைல Flight. அதனால பொருள் எல்லாம் முதல் நாளே எடுத்து வச்சுட்டேன். காலைல ஸ்ரீராம எழுப்ப வேண்டாமே சொல்லிட்டு அப்போதே விடைப்பெற்றுவிட்டேன். அவன் தூங்க போய்விட்டான். நானும் அன்றைய கால்ப்பந்து போட்டியில் அமர்ந்துவிட்டேன். சிறிது நேரம் களித்து, எனக்கு பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்டுக்கொண்டிருந்தது. போட்டியில் லயித்திருந்த நான், சற்றே திரும்பிப்பார்தேன். ஸ்ரீராம் பக்கத்தில் அமர்ந்து எதோ சொல்லிக்கொண்டிருந்தான். அவன் மழலை மொழி எனக்கு சரியாக விளங்காது என்பதாலும், போட்டியின் மீது கவனம் இருந்ததாலும் சரியாக கவனிக்கவில்லை. குரல் திரும்ப திரும்ப கேட்கவே, சற்றே கவனிக்க அரம்பித்தேன்.

"சீத்தா ... ஊருக்கு.... நாளைக்கு.... போ... no" என்றான். அவன் சொல்ல நினைத்தது பின்னர் தான் புரிந்தது. அவன் முதல் முறையாக பிரிவு என்பதை உணர்கின்றான். அவன் கண்களின் இருந்த பிரிவை கண்டேன். அவன் அதிகமாக அடம் பிடிக்க தெரியாது. வீட்டில் எல்லோரும் வேலைக்கு செல்வதால் அவனுக்கு அது பழகிவிட்டது. ஆனால், இந்த முறை அவன் அழுது அடம் செய்திருந்தால், அதை பெரிதாக எடுத்திருக்க மாட்டேன். இந்த முறை அவன் கேட்ட விதம் வேறுவிதமானது. அவன் பிரிவை எண்ணி, என்னை வேண்டிக்கொண்டு இருந்தான். என்னால் அவனுக்கு விடைத்தர முடியவிலை.

அவன் கேட்டாதது, தெரியாதது எல்லாம் வாங்கித்தந்த என்னால், இதை செய்ய முடியவில்லை. அப்பொழுது சில மாதங்களுக்கு முன்பு படித்த ஒரு கதை ஞாபகம் வந்தது.

அப்பா அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினார். தன் அறு வயது மகன் துங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்தார்.

"இங்க என்னடா பண்ற. இன்னும் துங்கலையா?" அப்பா மகனிடம் கேட்டார்.

"அப்பா நாளைக்கு School' ல Annual Day' பா. நான் பேச்சுப்போட்டியில பரிசு வாங்குறேன். நிங்க நாளைக்கு School' க்கு என்னோட வருவிங்களா?".

"கண்ணா! நாளைக்கு அப்பாவுக்கு office' ல முக்கியமான வேலை இருக்குடா. என்னால வர முடியாது பா. நீ போய் தூங்கு."

"அப்பா! எல்லாரோட 'Parents' சும் வராங்கப்பா. ஒரு நாளைக்கு வந்தா போதும்பா! நான் தான் first prize வாங்குறேன். நீங்களும் வரனும்பா!"

"கண்ணா! அப்பா சொன்னா கேட்டுக்கனும். போய் தூங்கு."

"இல்ல பா ......"

"டேய், அப்பா இவ்வளவு சொல்றேன், இன்னும் பிடிவாதமா இருக்கியே. நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேன். 'Pocket Money' தரேன். உன்னக்கு எல்லாம் செய்தாலும் இப்படி அடம் பிடிக்கிறியே! அப்பா, ஒரு நாள் 'Office' போகலைனா 1000 ருபாய் நஷ்டம். அப்புறம் யார் உன்னக்கு இதெல்லாம் பண்ணுவா. நீ போய் தூங்கு" எனறார் கோபமாக.

மகன் அறையை விட்டு வெளியேறினான்.

சிறிது நேரம் பிறகு, மகன் கதவை திறந்தான்.

"அப்பா!"

"என்னடா"

"அப்பா, நிங்க தந்த 'Pocket Money' ல கொஞ்சம் save பண்ணிருக்கேன். 800 ருபாய் இருக்கு. இதை வாங்கிக்கிட்டு ஒரு நாள் என் கூட வர முடியாதா?"

அப்பா அதிர்ந்தார்.

-------------------------------------

நல்லவேளை, நான் அம்மாவிடம் என் சம்பளத்தை பற்றி சொன்னதை அவன் கேட்கவில்லை. இல்லை என்றால், அவன் என்னுடைய ஒரு நாள் சம்பளம் தந்து என்னை உடைத்திருப்பான்.

இன்றும் சில சமயம், ஸ்ரீராம் எனது வீட்டிலுள்ள அறைக்கு சென்று தேடுகிறான். சில நாட்களில் என்னை மறந்துவிடுவான். நானும் அவனின் நினைவுகளில் இருந்து விடுபடுவேன்.

மறதி என்று ஒன்று கடவுள் தராவிட்டால் உலகம் எப்பொழுதோ கண்ணிரில் முழ்கியிருக்கும்.

பிரிவுடன்,

ஸ்ரீதர்

3 Comments:

At July 09, 2006 9:22 PM, Blogger ILA (a) இளா said...

//அவன் கேட்டாதது, தெரியாதது எல்லாம் வாங்கித்தந்த என்னால், இதை செய்ய முடியவில்லை//
மனசு ரொம்ப கஷ்டமாகிடுச்சுங்க.
முதன் முறையாக உங்கள் பதிவு பக்கம் வருகிறேன். நான் படித்த முதல் பதிவே அசத்தல். வாழ்த்துக்கள்

 
At July 10, 2006 2:44 AM, Blogger Geetha Sambasivam said...

ஸ்ரீதர்,
நல்லா எழுதறீங்க. இந்தச் சின்ன வயசிலே நீங்களும் தனியா இருக்கிறதாலே குடும்பம் நினைவு தான் ஆறுதல். உங்க பதிவைத் தமிழ் மணத்திலே சேர்க்கலையா? வாழ்த்துக்கள் உங்க பதிவுக்கும் என்னோட பதிவுக்கு வந்ததுக்கும்.ஸ்ரீராமிற்கு என் ஆசிகள்.

 
At July 10, 2006 4:10 AM, Blogger Sridhar Harisekaran said...

இளா! உங்கள் வாழ்த்திற்க்கு நன்றி.. உங்களை அசத்துன அளவுக்கு பதிவு எழுதினதுல எனக்கு மகிழ்ச்சி.

கீதா, இளா, கைப்புள்ள, விவசாயி, வருத்தப்படாதோர் வாலிப சங்க மக்கள் இவங்களைப்பார்த்து தான் நான் எழுதவே அரம்பிச்சேன்.

ஸ்ரீதர்

 

Post a Comment

<< Home